நேப்பியர்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடரின் முதல் 2 போட்டிகளையும் 5 மற்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றியது. அந்த அணி 2-0 என முன்னிலை வகிக்க, கடைசி டி20 போட்டி நேப்பியர், மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச, நியூசிலாந்து 20 ஒவரில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன் குவித்தது. அந்த அணியின் கான்வே அதிகபட்சமாக 63 ரன் (45 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), டிம் செய்பெர்ட் 35 ரன் (20 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கிளென் பிலிப்ஸ் 31 ரன் (20 பந்து, 4பவுண்டரி) விளாசினர். பாக். தரப்பில் பாகீம் அஷ்ரப் 3, ஷாகீன் அப்ரிடி, ஹரிஸ் ராவுப் தலா 2 விக்கெட் எடுத்தனர்.