இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணர் கோயில் கட்டவும், இதன் அருகே உள்ள மயானத்துக்கு சுற்றுச்சுவர் கட்டவும் பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தப்படி, இந்நாட்டில் மிகப்பெரிய மத சிறுபான்மையினராக இந்துக்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இவர்களுக்கு என்று இந்து கோயில்கள் எதுவும் கிடையாது. இந்நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்காக கடந்த 2017ல் அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பால், இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் 20 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட கோயில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது, அங்குள்ள தீவிரவாத இஸ்லாமிய மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், இப்பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. மேலும், இந்த இடத்தின் அருகே இந்துக்களுக்கான மயானமும் இடம் பெறுகிறது. இதற்கு சுற்றுச்சுவர் கட்டவும் தலைநகர மேம்பாட்டு ஆணையம் தடை விதித்தது.