குடிக்க தண்ணீர் கேட்பது போல் வீடுபுகுந்து திருடிய பெண்ணுக்கு தர்ம அடி

சென்னை: மயிலாப்பூர் வி.சி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். தனியார் நிறுவன ஊழியர். நேற்று மாலை வீட்டில் அன்பழகன் மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஒரு இளம்பெண், ‘‘தாகமாக இருக்கிறது. குடிக்க தண்ணீர் வேண்டும்,’’ என்று கேட்டுள்ளார். அன்பழகன் மனைவி தண்ணீர் எடுத்து வர சமையலறைக்கு சென்றபோது, படுக்கை அறைக்குள் நுழைந்த இளம்பெண் பீரோவை திறந்து, அதிலிருந்த நகைகளை எடுத்து கொண்டு தப்ப முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, அந்த இளம் பெண்ணை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார், பொதுமக்களிடம் இருந்து இளம்பெண்ணை மீட்டனர். விசாரணையில், யானைகவுனி பகுதியை சேர்ந்த லட்சுமி (33) என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் லட்சுமியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: