சிலி: முகக்கவசம் இல்லாமல் செல்பி எடுத்த சிலி அதிபர் செபாஸ்டியன் பினேராவுக்கு இந்திய மதிப்பில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இம்முறையை மீறும் நபர்களுக்கு அபராதமும்,சிறை தண்டனை ஆகியவையும் விதிக்க முடியும். இந்நிலையில் சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா, கச்சாகுவா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது அங்குள்ள இளம்பெண்ணுடன் செல்பி எடுத்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் முகக்கவசம் அணியவில்லை. இப்புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலி அதிபரே முகக்கவசம் அணியவில்லையா என பலரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.