அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நீரவ் மோடி சகோதரர் ரூ.20 கோடி வைர மோசடி

நியூயார்க்: நீரவ் மோடியின் சகோதரர் நேஹால் அமெரிக்காவில் இருக்கும் வைர நிறுவனத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள வைரங்களை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்டார். அவருடன் அவரது சகோதரர் நேஹால் மோடியும் தப்பியோடி விட்டார். இவர்கள் சிபிஐயால் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர்.

இந்நிலையில், நேஹால் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கும் எல்எல்டி டைமண்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடன் விதிமுறைகள் மற்றும் சரக்குகள் அடிப்படையில் ரூ.20 கோடி மதிப்புள்ள வைரங்களை பெற்றுள்ளார். இதற்காக முறைகேடான ஆவணங்கள், பொய்யான தகவல்களை வழங்கியுள்ளார். பின்னர் கோஸ்ட்கோ நிறுவனத்திடம் இணைந்து செயல்படுவதாக கூறி சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள வைரங்களை கோஸ்ட்கோவிடம் விற்பனைக்கு வழங்குவதாக போலியான தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக நேஹால் மீது நியூயார்க் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து நேஹாலின் வழக்கறிஞர் கூறுகையில், “இது ஒரு வர்த்தக பிரச்னை. நஹோல் குற்றவாளி கிடையாது” என தெரிவித்துள்ளார்.

Related Stories: