சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “எனக்கு உயிரும் உணர்வும் தந்தவர் கலைஞர். எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர்’ என்ற அடிப்படையில் பேராசிரியரின் பிறந்தநாள் விழாவில், உங்களில் ஒருவனான நான், கல்வி உதவித் தொகையினை வழங்கி உரையாற்றுகிறேன். இந்தியாவுக்கே வழிகாட்டும் சுயமரியாதை-சமூக நீதி - மாநில சுயாட்சி உள்ளிட்ட கொள்கைகளின் தாயகமாக விளங்கும் திராவிட இயக்கத்தின் தொட்டிலான தமிழகத்தில், முக்கால் நூற்றாண்டு கால வரலாற்றுப் பயணத்தை நெருங்கும் திமுக, நூற்றாண்டு கடந்து தொடர்ந்து பயணித்திட உங்களில் ஒருவனான நான் எந்நாளும் முன்னிற்பேன். அதற்கான கூடுதல் வலிமை தரும் நாளாக பேராசிரியர் பிறந்தநாளை முன்னெடுப்போம்.