உரிமை கோரப்படாத சடலங்களை கைரேகை மூலம் அடையாளம் காண வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்த வக்கீல் முத்துகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து, சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது  இறுதிச்சடங்குகள் செய்யப்படுகின்றன. ஆதரவற்ற சடலங்களுக்கு சடங்குகள் செய்வதில்லை. இந்த சடலங்களை மயானங்களில் அரைகுறையாக புதைக்கின்றனர்.  பல நேரங்களில் நாய்கள் கடித்து குதறுகின்றன. அடையாளம் தெரியாத சடலங்களில் உள்ள கைரேகைகள் மூலம் ஆதார் அட்டையில் கொடுத்துள்ள அடையாளத்தை கண்டறிந்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும்.  எனவே, சடலங்களின் கைரேகைகள் மூலம் அடையாளம் காணவும், 10 ஆண்டுகளில் அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்கள் எத்தனை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்’’  என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், மனுவிற்கு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜன. 19க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: