புதுடெல்லி: துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்ந்த அவதூறு வழக்கில், அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு ஆட்சேபணை எழுப்பிய பாஜ எம்.பி மனோஜ் திவாரி, எம்எல்ஏ விஜேந்தர் குப்தா ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு பள்ளிகளில் வகுப்பறை கட்டும் திட்டத்தில் ஊழல் செய்தார் என துணை முதல்வரும், கல்வி இலாகாவை கைவசம் வைத்து உள்ளவருமான சிசோடியா மீது பாஜ எம்.பிக்கள் மனோஜ் திவாரி, ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், பர்வேஷ் வர்மா, எம்எல்ஏக்கள் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, விஜேந்தர் குப்தா, செய்தித்தொடர்பாளர் ஹரிஷ் கன்னா ஆகியோர் குற்றச்சாட்டு சுமத்தினர். இதுதொடர்பாக சிசோடியா மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு கடந்த ஆண்டு தொடுத்தார்.