போபால்: பாரதிய ஜனதாவை சேர்ந்த சர்ச்சைகளுக்கு பெயர்போன நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாகூர் தமது பேச்சால் மீண்டும் சிக்கலில் சிக்கியிருக்கிறார். மத்திய பிரதேச மாநிலத்தில் க்ஷத்திரிய மகா சபா சார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய பிரக்யா தாகூர், இந்து மதத்தில் உள்ள சாதிய கட்டமைப்பு குறித்து உரையாற்றினார். அப்போது பிரமணர்களோ, ஷத்ரியர்களோ, அவர்களை அவ்வாறு அழைப்பதை தவறாக எண்ணாதபோது சூத்திரர் என்று சொன்னால் சூத்திரர்கள் கோபப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அவர்கள் சரிவர புரிந்துக் கொள்ளாததே இதற்கு காரணம். அதை ஒரு மோசமான வார்த்தையாக கருதுகிறார்கள் என்று பிரக்யா தாகூர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஷத்ரியர்களை ஷத்ரியர்கள் என்று சொன்னாலோ, பிராமணர்களை பிராமணர் என்று கூறினாலோ வைசியர்களை வைசியர் என்று சொன்னாலோ அவர்கள் தவறாக எடுத்துக் கொள்வது இல்லை.