விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி குத்திக்கொலை: தந்தை, மகன் கைது : ஒருவருக்கு வலை

சென்னை: பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (28). பூந்தமல்லி ஒன்றிய விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர். இவரது நண்பர் சதீஷ் (26). கார் டிரைவர்களான இவர்கள், பணம் வைத்து சீட்டு விளையாடும் பழக்கம் கொண்டவர்கள். நேற்று முன்தினம் இரவு சதீஷ் தனது வீட்டின் மாடியில் அசோக்குமாருடன் மது அருந்தி உள்ளனர். அப்போது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு வநத் சதீஷின் அண்ணன் முத்து, அவர்களை விலக்கிவிட்டபோது, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது, அசோக்குமார் தனது செல்போனை எடுத்து முத்துவின் தலையில் அடித்துள்ளார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து, அசோக்குமார் அங்கிருந்து தப்பி பூந்தமல்லி, திருவள்ளூர் நெடுஞ்சாலை புதுச்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை விரட்டி வந்த சதீஷ், அவரது அண்ணன் முத்து, அவர்களது தந்தை ராஜா ஆகியோர் அசோக்குமாரை மறித்து தாக்கினார்.

அப்போது, ராஜா மறைத்து வைத்திருந்த கத்தியால் அசோக்குமாரை  சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் அசோக்குமார் கீழே சரிந்தார். இதனை கண்டு மூவரும் அங்கிருந்து தப்பினர்.  சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அசோக்குமாரை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அசோக்குமார் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வெள்ளவேடு போலீசார், அசோக்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராஜா (56), அவரது மகன் முத்து (28) ஆகியோரை நேற்று கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சதீஷை தேடி வருகின்றனர்.

Related Stories: