உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் நள்ளிரவில் கள்ளக்காதலனை வரவழைத்து தூங்கிய கணவனை வெட்டிக்கொன்றேன்: கைதான இளம்பெண் போலீசில் பகீர் வாக்குமூலம்

ஓசூர்: உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொலை செய்ததாக கைதான பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பேகேப்பள்ளி எழில்நகர் 6வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் தனபால் (27). கட்டிட மேஸ்திரியான இவருக்கும், அருள்சத்யா (20) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் தனபால் நேற்று முன்தினம் அதிகாலை, தலையில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து ஓசூர் சிப்காட் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அருள்சத்யா, ஊத்தங்கரை தாலுகா மோட்டூர் அருகே உள்ள பாப்பாரப்பட்டியை சேர்ந்த தனது கள்ளக்காதலனான லாரி டிரைவர் மணிகண்டன் (எ) சரவணன் (25) என்பவருடன் சேர்ந்து, தனபாலை கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அருள் சத்யா, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கணவர் தனபாலை கொலை செய்தது குறித்து, அருள்சத்யா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கும், மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.

இதையறிந்த எனது கணவர் என்னை கண்டித்தார். இதனால், எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. எனது உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதால், அவரை தீர்த்துக் கட்ட மணிகண்டனுடன் சேர்ந்து முடிவு செய்தேன். அதன்படி கடந்த 9ம் தேதி இரவு நானும், தனபாலும் தூங்க சென்றோம். எங்களது திட்டத்தின்படி, நள்ளிரவில் மணிகண்டன் எனது வீட்டிற்கு வந்தார். அப்போது, நானும், மணிகண்டனும் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த தனபாலின் தலையிலும், இடது காது அருகிலும் கத்தியால் வெட்டினோம். இதில் அவர் இறந்துவிட்டார். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கைதான 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: