வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற அடுத்த 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதே தனது இலக்கு என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன், அடுத்த மாதம் பதவியேற்கவுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முனைப்பாக உள்ள ஜோ பைடன், மருத்துவக் குழு ஒன்றையும் தற்போதே அமைத்துள்ளார். கொரோனா தடுப்பு தலைமை மருத்துவ ஆலோசகராக தொற்று நோய் நிபுணர் அந்தோணி காசினி நியமிக்கப்பட்டுள்ளார். தாம் பதவியேற்ற அடுத்த 100 நாட்களில் கொரோனா முற்றிலும் ஒழிந்துவிடாது என தெரிவித்துள்ள பைடன், ஆனால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.