சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு 1000 கோடியை உடனடி நிதி உதவியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. 2 லட்சத்துக்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி விட்டன. கொள்ளிடம், சீர்காழி உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் முழுமையாக சேதமடைந்து விட்டன. விழுப்புரம் மாவட்டத்திலும் புரெவி புயலால் பெய்து வரும் மழையால் மக்களுக்கும், பயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சேதமடைந்த பயிர்கள், குடிசைகள், உயிரிழந்த கால்நடைகள் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்.