மங்களூரு: மங்களூரு அருகேயுள்ள போலார் கிராமத்தை சேர்ந்த மீன்பிடி தொழில் செய்யும் ஒருவருக்கு சொந்தமான ஸ்ரீரக்சா என்ற படகில் கடந்த திங்கட்கிழமை காலை மீனவர்கள் குழுவாக அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்றனர். கடலில் சுமார் 25 கி.மீட்டர் தூரம் வரை சென்ற அவர்கள் காலை முதல் மாலை வரை மீன் பிடித்துள்ளனர். இதில் அதிகளவு மீன்கள் கிடைத்த மகிழ்ச்சியில் மீன்களை படகில் ஏற்றிக் கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது கடல் சீற்றத்தில் சிக்கிய படகு நிலை தடுமாறி தண்ணீரில் கவிழ்ந்தது. படகில் அதிகளவு மீன்கள் இருந்ததால் அதிக பாரத்தால் படகு தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. உடனே மீனவர்கள் மீன்களை கடலுக்குள் கொட்டிவிட்டு படகை மீட்க முயற்சித்தனர். ஆனால் படகு அவர்களின் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. இதனால் செய்வதறியாத மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி தப்பிக்க முயன்றனர்.