சென்னை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மனநிறைவு அளிக்கவில்லை என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: வன்னியர்களுக்கு 20 சதவித இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் தான் போராட்டத்தை பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையில் வன்னியர் சங்கமும், பாமகவும் இணைந்து சென்னையில் இன்று நடத்தின. போராட்டத்தைத் தொடர்ந்து அன்புமணி மற்றும் போராட்டக் குழுவினரை அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, பாமக சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், வன்னியர்களின் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து சாதகமான முடிவை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.