தொழில் அதிபரின் டிரைவரை மிரட்டி கார் கடத்தல்

புதுடெல்லி: டிரைவருடன் தொழிலதிபரின் காரை கடத்தி சென்ற முகமூடி கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.தெற்கு டெல்லி சத்தர்பூரைச் சேர்ந்த தொழிலதிபரிடம் கார் டிரைவராக தினேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். ஏர்போர்ட்டில் காத்திருக்கும் நண்பரை  அழைத்து வரும்படி தினேஷுக்கு தொழிலதிபர் கூறினார்.அதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் ஏர்போர்ட் நோக்கி தினேஷ் காரில் சென்றபோது, வச்ந்த கஞ்ச் அருகே அவரை ஒரு கும்பல்  வழிமறித்து நிறுத்தியது. முகமூடி அணிந்திருந்த 3 அல்லது 4 பேர், தங்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை காண்பித்து, தினேஷை  மிரட்டி காரில் ஏறினர்.

கும்பலில் ஒருவர் காரை ஓட்ட மற்றவர்கள் தினேஷை தங்களது கட்டுப்பாட்டில் பார்த்துக் கொண்டனர். கும்பலைச் சேர்ந்த வேறு சிலரும் மற்றொரு  காரில் கடத்தல் காரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். வழியில் ஆங்காங்கு சில காரணங்களுக்காக வண்டியை நிறுத்திய கும்பல் ஒரு வழியாக  அரியானா மாநிலம் பானிப்பட் அருகே தினேஷை இறக்கி விட்டு காருடன் தப்பித்துச் சென்றது.அங்கிருந்து சத்தர்பூர் வந்த தினேஷ், கார் கடத்தல் குறித்து தொழிலதிபரிடம் கூறினார். தொழிலதிபர் அறிவுறுத்தலின் பேரில், காருடன் கடத்தப்பட்டது  குறித்து சத்தர்பூர் காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் எப்ஐஆர் பதிவு செய்துள்ள போலீசார், கடத்தப்பட்டதாக தினேஷ்  கூறிய பகுதியின் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பித்து தலைமறைவாகி உள்ள கும்பலை வலை வீசி தீவிரமாக தேடி  வருகின்றனர்.

Related Stories: