பெங்களூரு: மாநிலத்தில் கடந்த 2013ல் நடந்தது போல் பாஜ இரண்டாக உடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது என மாஜி அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறினார். இதுதொடர்பாக நிருபர்களிடம் மாஜி அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது: கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதே நேரம் பாஜவினர் ஆபரேசன் தாமரையால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியில் அமர்ந்துள்ளது. பாஜ பதவியை கைப்பற்றி இருந்தாலும் மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. காங்கிரசில் மாற்று கருத்துகள் இருந்தாலும் அது விரைவில் சரி செய்யப்படும். அதே நேரம் பாஜவில் இப்போது பதவிக்கான போட்டி ஏற்பட்டுள்ளது. 2013ல் முதல்வர் எடியூரப்பா மட்டும் இன்றி அமைச்சர் ராமுலு ஆகியோர் தனியாக பிரிந்து சென்றனர்.