மழைப்பொழிவை பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் இன்று நிவர் புயலாக மாறியது. இந்த புயல் நாளை மாலை காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. பல மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளான 4,133 இடங்களில் ஆட்சியர்கள் தனிக்கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம். முன்னெச்சரிக்கை தொடர்பான அரசின் அறிவுறுத்தல்களை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் 1519 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன; புயலை முன்னிட்டு தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு அலுவலர்களுக்கு நாளை விடுமுறை விடப்படுகிறது. அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள்.

நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமையை பொறுத்து விடுமுறை நீட்டிக்கப்படும். மழைப்பொழிவை பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.அரசின் வழிமுறைகளை மக்கள் கடைபிடிக்குமாறும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: