கொரோனா தற்போதைய நிலவரம் என்ன?: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை

டெல்லி: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 8 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் தற்போது குறைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90.95 லட்சமாகியுள்ளது. தொற்றுக்கு ஆளானவர்களில் இதுவரை 85,21,617 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,33,227 ஆகவும் உள்ளது. குணமடைந்தவர்கள் சராசரி 93.69 ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.46 எனவும் உள்ளது. சிகிச்சை பெறுவோர் சராசரி 4.85 ஆக உள்ளது.

இருப்பினும், கொரோனா வைரஸ் வீரியம் காரணமாக வடஇந்தியாவில் சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி அவப்போது கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், நாளை டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்துக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் நிவர் புயலாக உருவாகும் என்றும் நாளை மறுநாள் சென்னைக்கும் காரைக்காலுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் தொடர்பான மீட்புப் பணிகள் குறித்தும் முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடியிடம் கேட்டறிவார் என்று தெரிவிக்கப்படுகிறது. 

Related Stories: