அரசு நிகழ்ச்சியில் பாஜவிடம் அதிமுக சரண் அடைந்துள்ளது: திருமாவளவன் அறிக்கை

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் பாஜ-அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்றுகூட பாராமல் துணை முதலமைச்சர் அறிவிப்பு செய்திருக்கிறார். அதை முதலமைச்சரும் ஆமோதித்து இருக்கிறார். இந்த கூட்டணியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். பாஜ, அதிமுக கூட்டணி தொடரும் என்று ஓபிஎஸ்- இபிஎஸ் அறிவிப்பு செய்திருக்கிறார்கள். இதில் இருந்தே அவர்கள் எந்த அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

அதிமுகவை பாஜவுக்கு சரணடைய வைத்திருக்கும் இந்த துரோகச் செயலை அதிமுகவை துவக்கிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அதிமுக தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டு நலனை அடகு வைத்தது மட்டுமின்றி, இப்போது தங்களது கட்சியையும் பாஜவுக்கு அடகு வைத்துவிட்டனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போலவே எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் தமிழக மக்கள் இந்தத் துரோகச் செயலுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: