பாலக்கோடு: பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் விழுந்து 15 மணி நேரம் போராடி மீட்கப்பட்ட யானையை, வனத்துறையினர் நேற்று மாரண்டஅள்ளி காப்புக்காடு கூசுமலை வனப்பகுதியில் விடுவித்தனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி ஏழுகுண்டூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாசலத்தின் தோட்டத்தில் உள்ள கிணற்றில், நேற்று முன்தினம் அதிகாலை பெண் யானை ஒன்று தவறி விழுந்தது. தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, 15 மணி நேர போராட்டத்திற்கு பின் யானையை உயிருடன் மீட்டனர். பின்னர், யானைக்கு மயக்கம் தெளிவதற்காக ஸ்பிரே அடித்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின் மயக்கம் தெளிந்து, நள்ளிரவு 1 மணி அளவில் எழுந்த யானை, மெதுவாக தேன்கனிக்கோட்டை காப்புக் காட்டிற்குள் சென்றது.