சென்னை: வடசென்னையை கலக்கிய பிரபல பெண் தாதாவுக்கு பாஜவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாஜ தலைவராக எல்.முருகன் பதவியேற்றதில் இருந்து சினிமா பிரபலங்கள் பாஜவில் இணைந்து வருகின்றனர். அதேபோல, போலீசாரால் தேடப்பட்டு வரும் ரவுடிகள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜவில் இணைவது பேஷனாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜவில் இணைந்தார். அவர் இணைந்தது கட்சியில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மயிலாப்பூரை சேர்ந்த டெக்கன் ராஜா, ஈசிஆர் பகுதியைச் சேர்ந்த சங்கர் உள்ளிட்ட பல ரவுடிகள் பாஜவில் இணைந்தனர். மேலும் படப்பையில் பிரபல ரவுடி படப்பை குணாவும் பாஜவில் இணைவதாக இருந்தது. அதற்குள் அவரை போலீசார் கைது செய்து விட்டனர்.