அமலாக்கத் துறை பேரம் பேசியது பினராயிக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் அப்ரூவர் ஆகலாம்: சொப்னா பரபரப்பு ஆடியோ

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் தன்னை அப்ரூவர் ஆக்குவதாக அமலாக்கத் துறை கூறியதாக தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, சொப்னா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கை என்ஐஏ, மத்திய அமலாக்கத் துறை, சுங்க இலாகா ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் சொப்னா, சரித்குமார், சந்திப்நாயர், முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஐஏஎஸ் உள்பட 30க்கும் மேற்பட்ேடார் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சொப்னா, சந்திப்நாயர், சரித்குமார், சிவசங்கர் உள்ளிட்டோருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. சிவசங்கரின் ஜாமீன் மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே சொப்னாவுக்கு எதிராக சுங்க இலாகா காபிபோசா சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்தது. தற்போது இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒரு இணையதளத்தில் சொப்னா பேசிய ஆடியோ வெளியானது. அதில் அவர் கூறியிருப்பதாவது: முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் இந்த வழக்கில் அப்ரூவர் ஆக்குவதாக அமலாக்கத்துறை என்னை கட்டாயப்படுத்தியது. நான் கொடுத்த வாக்குமூலத்தை வாசித்து பார்க்க அனுமதிக்கவில்லை. அரசின் சில திட்டங்களுக்கு நிதி சேகரிப்பதற்காக முதல்வர் பினராய் விஜயன் துபாய் சென்றிருந்தார். அதற்கு முன்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்காக சிவசங்கர் துபாய் சென்றார். அப்போது நானும் உடன் சென்றேன்.

அப்போது, முதல்வர் பினராய் விஜயனுக்காக கமிஷன் வாங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கட்டாயப்படுத்தியது. ஆனால், நான் மறுத்துவிட்டேன். ஆனாலும் என்னிடம் வாக்குமூலம் பெறுவதற்காக மீண்டும் வருவோம் என்று அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு சொப்னா  அதில் கூறியுள்ளார்.  இது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து  சொப்னா அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு சென்று தென்மண்டல உதவி ஐ.ஜி விசாரணை நடத்தினார். அப்போது அது தன்னுடைய குரல்தான் என்றும், ஆனால் எங்கு வைத்து, எப்போது, யார்? அதை பதிவு செய்தனர் என்பது தெரியாது என்று கூறினார். இது குறித்து சைபர் செல் போலீசாரும் சிறை துறையினரும் மத்திய அமலாக்கத்துறையினரும் விசாரணை ெதாடங்கியுள்ளனர்.

Related Stories: