மும்பை: பீமா-கொரேகான் வன்முறை வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கவிஞரும்-சமூக ஆர்வலருமான வரவர ராவை நானாவதி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வரவர ராவ், 2018ம் ஆண்டு, ஜனவரியில் மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இந்த சட்டத்தின்கீழ், பல ஆண்டுகளாக விசாரணையின்றி கைது செய்து வைக்க முடியும். வரவர ராவ் விசாரணையும், 2 வருடங்களாக நடைபெறவேயில்லை. உடல்நலக்குறைவு கொண்ட ஒரு சீனியர் சிட்டிசனை தொடர்ந்து சிறையில் அடைப்பது, வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பின் 21 வது பிரிவை மீறுவதாகும் என்று அவரது குடும்பத்தினர் சார்பில் மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.