மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க மாஜி மாவட்ட செயலாளர் கைது

தாம்பரம்:  பெருங்களத்தூர் அருணகிரி நகரை சேர்ந்த பாலமுருகன் (42), அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 12ம் தேதி இவரது  கடைக்கு வந்த ஒரு ஆசாமி, ‘‘பெருங்களத்தூரை சேர்ந்த ஜெயராமன் உங்களிடம் ₹40 ஆயிரம் மாமூல் வாங்கி வரும்படி கூறியுள்ளார். பணம் தர  மறுத்தால், கடையை நடத்த விடமாட்டோம். ஜெயராமனுக்கு எல்லா இடத்திலும் அடியாட்கள் மற்றும்  ரவுடிகள் உள்ளனர். எனவே, உங்களுக்கு  பல்வேறு வகையில் தொல்லை தருவோம்,’’ என மிரட்டியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த பாலமுருகன் இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து,  கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.அதில், விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளரான குண்டுமேடு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர், மளிகை கடையில் மாமூல்  கேட்டு மிரட்டியது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்தனர். பின்னர், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜாமீனில் விடுவித்தனர். ஜெயராமனை  தேடி வருகின்றனர்.

Related Stories: