வாஷிங்டன்: வெப்பமண்டல புயலான அயோட்டா மத்திய அமெரிக்க நாடுகளை தொடர்ந்து கொலம்பியாவிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸ், எல்சார்படோர், கவுதமாலா, நிகரகுவா, எப்ராவிடென்சியா ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளை தொடர்ந்து அயோட்டா என்கின்ற சக்தி வாய்ந்த புயல், தற்போது தென் அமெரிக்க நாடுகளையும் கடுமையாக தாக்கி வருகிறது. கடற்கரையை ஒட்டிய கொலம்பியாவில் சான் ஆண்டரஸ் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டது. 260 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால், கடலில் பல அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள் பலரையும் பீதியடைய செய்தது. ஹோண்டுராஸின் வடக்கு பகுதியில் உள்ள பல நகரங்கள் நிலச்சரிவை சந்தித்தன. 300க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. 20க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.