குழந்தையுடன் பிச்சை எடுப்பதுபோல் நடித்து கொள்ளையடித்த பெண்கள்

திருமலை: குழந்தையை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது போல் நடித்து கடைக்குள் நுழைந்து 2 லட்சத்தை திருடிச்சென்ற வடமாநில பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதி லீலா மஹால் சந்திப்பில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இங்குள்ள ஸ்டீல் மற்றும் சிமென்ட் கடையில் 2 வடநாட்டு பெண்கள், 2 கைக்குழந்தை, சிறுமியுடன் பிச்சை எடுப்பதுபோல் கடந்த 12ம் தேதி சென்றுள்ளனர். அவர்களுக்கு கடை உரிமையாளர், செல்போனை பார்த்தபடியே தானம் அளித்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட பெண்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

அதற்குள் 2 பெண்களும் உரிமையாளரை சுற்றி நின்றுகொள்ள, அங்கிருந்த சிறுமி கல்லாவின் அருகே சென்று அதிலிருந்த 2.50 லட்சத்தை கொள்ளையடித்துள்ளார். பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனை கவனிக்காத கடை உரிமையாளர் அன்று மாலை கல்லா பெட்டியை திறந்தபோது பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது பிச்சை எடுக்க வந்த பெண்கள், பணம் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து போலீசில் கடை உரிமையாளர் புகார் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வடமாநில பெண்கள் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: