புதுடெல்லி, :பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 194 பேர் (81%) கோடீஸ்வரர்கள். 163 பேர் (68% ) மீது குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்கள் குறித்து ஆய்வு செய்த, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ததில், 163 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில், 123 பேர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என மிக மோசமான குற்ற வழக்குகள் உள்ளன.வெற்றி பெற்றோரில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த 54 பேர், பா.ஜ.,வை சேர்ந்த 47 பேர், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 20 பேர், காங்., கட்சியை சேர்ந்த 16 பேர், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 10 பேர் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் ஐந்து பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. வெற்றி பெற்றுள்ளவர்களில் 194 பேர் கோடீஸ்வரர்கள்’ என கூறப்பட்டு உள்ளது.