காற்றின் தரம் குறைந்த மாநிலங்களில் வரும் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா?: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை கேட்ட வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. டெல்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 7 முதல் 30 வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து பதில் அளிக்க மத்திய அரசு, டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2-ந் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்புடைய மனுக்களை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு கடந்த புதன்கிழமை விசாரித்தது. அப்போது பிறப்பித்த உத்தரவில், பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்கள் தடைவிதித்துள்ளன.

காற்று மாசு அதிகமுள்ள நகரங்களை கொண்ட மாநிலங்களிலும், பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை விதித்துள்ளதால், நோட்டீஸ் அனுப்ப தேவையில்லை. அதே நேரம், காற்றின் தரம் குறைந்த மாநிலங்களில் நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து காற்று மாசு நிலவும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, அசாம், பீகார், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதற்கிடையே, பட்டாசு வெடிக்கத் தடை கோரும் விவகாரம் தொடர்பான மனுக்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தாக்கல் செய்த நிலையில், வழக்கில் நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Related Stories: