சென்னை: 103வது புரட்சி தினமான நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றினார். இதில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், க.உதயகுமார், வெ.ராஜசேகரன் உடனிருந்தனர். பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து நவம்பர் 26-27 தேதிகளில் பொதுவேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. அந்த போராட்டத்தை தமிழகத்தில் வலுவாக நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசித்துள்ளோம். பட்டாசுக்கு தடை நீடித்தால் தொழிலாளர்கள், சிறு உடமையாளர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் என 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். எனவே, முதலமைச்சர் இந்த பாதிப்பிலிருந்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.