இரவு முழுவதும் நடந்த சண்டைகாஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: அப்பாவி ஒருவரும் குண்டு பாய்ந்து பலி

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் குண்டு பாய்ந்து பொதுமக்களில் ஒருவரும் இறந்தார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள லால்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இரவு முழுவதும் இந்த சண்டை நடந்தது. இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றொரு தீவிரவாதி சரணடைந்தார்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்களில் ஒருவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இந்த சண்டை நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. ‘தீவிரவாதம் ஒரு மோசடி’: பாதுகாப்பு படையிடம் சரணடைந்த தீவிரவாதியின் பெயர் கன்வார் சுல்தான் மிர். அதே பகுதியை சேர்ந்தவர். கடந்த செப்டம்பரில்தான் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இவர் கூறுகையில், ‘‘தீவிரவாதம் என்பது ஒரு மோசடி வேலை. இந்த இயக்கங்களில் உள்ள அனைவரும் தீவிரவாதத்தை கைவிட வேண்டும். நான் வாழ்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்த பாதுகாப்பு படைகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,’’ என்றார். இந்த வீடியோவை தனது டிவிட்டர் பதிவில் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது.

Related Stories: