சென்னை: புளியந்தோப்பு பகுதியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். அதிமுகவின் பலம் அனைவருக்கும் தெரியும். அதிமுக எஃகு கோட்டை, மோதுபவர்கள் மண்டைதான் உடைபடும். கட்சி ஆரம்பித்து விட்டதால் கமல் எதையாவது பேசிதான் ஆக வேண்டும். எம்ஜிஆர் அதிமுகவின் நிறுவன தலைவர். அவர் படத்தை பாஜ பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. அவர்கள் கட்சியில் சிறந்த தலைவர்களே இல்லையா. எதற்கு எம்ஜிஆர் படத்தை பயன்படுத்த வேண்டும். பாஜ வேல் யாத்திரைக்கு அனுமதி கொடுப்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் 2 ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு ஆளுநர் செயல்படுவார் என நம்புகிறேன். தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இனியும் தொடர்ந்து வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.