குன்னூர்: கிளீன் குன்னூர் திட்டத்தில் கடந்தாண்டில் 8,70,603 கிலோ குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. குன்னூர் ஆறு பல்வேறு மலைகளை கடந்து நீர்வீழ்ச்சியாக பயணித்து குன்னூர் மேட்டுப்பாளையம் இடையில் உள்ள மலைப்பாதையின் வழியே பயணித்து பவானிசாகர் அணையை அடைகிறது.குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை பாதையில் உள்ள வனவிலங்குகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஆறு உள்ளது. குன்னூர் பொதுமக்கள் ஆற்றில் அதிகளவு குப்பைகளை கொட்டி வந்ததால் தண்ணீர் மாசடைந்து வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதைக் கருத்தில் கொண்டு கிளீன் குன்னூர் என்ற தன்னார்வலர்கள் இணைந்து இந்த ஆற்றினை பாதுகாக்க வேண்டும் எனக்கோரி குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மறு சுழற்சி செய்ய இயலாத மற்றும் விற்பனை செய்ய இயலாத, பிளாஸ்டிக் கழிவுகளை, சுமார் 200 கிலோ எடை கொண்ட உயர் அழுத்த பொதிகள் ஆக மாற்றி அதை கொண்டு தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் கிளீன் குன்னூர் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.