மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தை சுற்றியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவார காடுகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் வனப்பகுதி யானைகளின் வழித்தடம் என்பதால் காட்டு யானைகளின் நடமாட்டம் ஆண்டு முழுவதுமே காணப்படும். வனத்தினுள் வறட்சி ஏற்படும் காலங்களில் தண்ணீர் தேடி காட்டை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகும் யானைகள் அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இதனை தவிர்க்க வனத்துறையினர் யானைகள் வெளியேறும் வன எல்லைகளில் சுமார் 31 இடங்களில் தண்ணீர் தொட்டிகளை கட்டி அதில் நீர் நிரப்பி பராமரித்து வருகின்றனர். கோடை காலங்களில் தண்ணீர் தேடி அலையும் யானைகள் இந்த தொட்டிகளில் நீரை அருந்தி தாகம் தணித்த பின்பு மீண்டும் காட்டுக்குள் சென்று விடும். அண்மை காலமாக இப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக வனத்தின் வறட்சி நீங்கி வனத்தினுள் உள்ள குட்டைகள், நீரோடைகள், மழை நீர் தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பியே காணப்படுகிறது.