அரியானாவில் கல்லூரி மாணவி சுட்டுக் கொலை; கடத்தல் முயற்சி தோல்வியால் இளைஞர் ஆத்திரம்: 12 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்தது போலீஸ்

அரியானா: கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 3 இளைஞர்களை அரியானா காவல்துறை கைது செய்துள்ளது. நிகிதா தோமர் என்ற 21 வயது கல்லூரி மாணவி நேற்று தேர்வு எழுதுவதற்காக பரிதாபாத்தில் உள்ள கல்லூரிக்கு சென்றுள்ளார். அவரை வழிமறித்த சிலர் காரில் கடத்த முயன்றனர். அப்போது கூச்சலிட்டபடி காரில் ஏற மறுத்து நிகிதா  போராடினார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் நிகிதாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அதே காரில் தப்பி ஓடிவிட்டார். குண்டு துளைத்ததால் படுகாயம் அடைந்த நிகிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

கல்லூரி மாணவி கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பரிதாபாத் காவல்துறையினர் குற்றவாளிகள் தவ்ஃபீக் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். நிகிதா தோமருக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக ஏற்கனவே தவ்ஃபீக் மீது அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் தங்கள் மகளை இழக்க நேரிட்டிருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: