மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்வதா? மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது,  எடப்பாடி அதிமுக அரசின் சைபர் கிரைம் போலீசார், ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்திருப்பது முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில்  உள்ள காவல்துறையின் பாரபட்சமான-வன்மம் நிறைந்த அணுகுமுறையையே காட்டுகிறது. தொல்.திருமாவளவன், ஐரோப்பிய பெரியார்-அம்பேத்கர்  படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று, தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், காலம் காலமாக என்ன  கருத்துகளை எடுத்துச் சொல்லி, இந்த மண்ணில் விழிப்புணர்ச்சியை உருவாக்கினார்களோ, அந்த வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்திருக்கிறார்.    இதைத்தான் பெரியாரும், அம்பேத்கரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்தனர்.

அதுகுறித்து, திருமாவளவன் பேசியதை, திரித்துச் சொல்வதற்காக வெட்டி-சமூகவலைதளங்களில் பரப்பி, தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்ட  நினைக்கும் மதவெறி அரசியல் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது  கண்டனத்திற்குரியது. இந்தப் பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்துகிறேன். திமுக கூட்டணிக்குள் கலகம் விளைவிக்க இதை ஒரு வாய்ப்பாகப்  பயன்படுத்திக்கொள்ளலாம் என வாய் பிளந்து நிற்கும் மதவெறியர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறாது. பெண்களுக்கான உரிமைகளைப் போற்றி   நிலைநாட்டுவதில், திமுக அரசு செய்த சாதனைகளைப் போல, எந்த அரசும்-இயக்கமும் செய்ததில்லை.  

பெரியார்-அம்பேத்கர் கனவுகளை நனவாக்கும் வகையில், கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில்,  பெண்களுக்கான சொத்துரிமை,  கல்வியுரிமை-வேலைவாய்ப்பு உரிமை என அனைத்தும் ஆண்களுக்கு நிகராக வழங்கப்பட்டது. திமுக எந்தப் பிரிவினரையும் விலக்கி வைக்காமல்,  அனைத்துத் தரப்பு  மக்களையும் அரவணைத்து, அனைவருடைய உயர்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் அல்லும் பகலும் அயராமல் பாடுபடும்   பேரியக்கம்.

Related Stories: