சென்னை: வாரம் ஆறு நாட்கள் இயங்கி வந்த ரயில்கள் தினசரி இயங்குகின்ற வகையில் மாற்றம் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: தமிழகத்தின் பல்வேறு நகரங்களை இணைக்கின்ற ரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்பட்டு வந்த ரயில்களின் பயண நாட்களை அதிகரிப்பதற்கான கோரிக்கையானது, தமிழக மக்கள் சார்பில் ரயில்வே அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், திருச்சிராப்பள்ளி-காரைக்குடி, காரைக்குடி-விருதுநகர், காரைக்குடி-திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர்-காரைக்குடி வழித்தடத்தில், வாரம் ஆறு நாட்கள் இயங்கி வந்த ரயில்கள் தினசரி இயங்குகின்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை-போடி நாயக்கனூர் மற்றும் போடி நாயக்கனூர்-சென்னை வழித்தடத்தில் வாரம் மூன்று நாட்கள் இயங்கி வந்த ரயில்கள், வாரம் ஆறு நாட்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பயனுள்ள வகையிலான அறிவிப்புகளை வழங்கியுள்ள பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்க்கு, தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
