ஆம்பூர்: ஆம்பூர் அருகே, குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி அமைச்சர் வீரமணியை பெண்கள் முற்றுகையிட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி காந்திநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலை 9 மணியளவில் பேரணாம்பட்டு சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வந்துகொண்டிருந்தார். அமைச்சரின் கார் மற்றும் போலீஸ் வாகனங்கள் தொலைவில் நின்றன. போக்குவரத்து நெரிசல் குறித்து அங்கிருந்தவர்களிடம் அமைச்சர் கேட்டார்.