‘பாலியல் தொல்லை கொடுத்ததை போலீசில் சொல்ல முயன்றதால் கொன்றேன்’: திருநங்கை கொலையில் வாலிபர் வாக்குமூலம்

கோவை: பாலியல் தொல்லை கொடுத்ததை போலீசில் சொல்லி விடுவேன் என்று மிரட்டியதால் திருநங்கையை கொன்றதாக கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் சங்கீதா (59). கோவை மாவட்ட திருநங்கைகள் நல சங்க தலைவராக இருந்தார். வடகோவையில் ‘’டிரான்ஸ் கிச்சன்’’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்தார். கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பேரலில் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுதொடர்பாக கொலையாளியை போலீசார் தேடி வந்தனர். இதில், கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த நாகப்பட்டினம் தரங்கம்பாடியை சேர்ந்த ராஜேஷ் (23) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: ஐ.டி.ஐ. முடித்த நான் கோவையில் ‘’டிரான்ஸ் கிச்சன்’’ என்ற பெயரில் திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகத்தில் சப்ளையர் மற்றும் டெலிவரி பாயாக சேர்ந்தேன். 23 நாட்கள்  வேலை பார்த்தேன். சங்கீதா வீட்டிலேயே தங்கி வந்தேன். அப்போது நான் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தேன். அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார். இதுதொடர்பாக சம்பவத்தன்று எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் கத்தியால் அவரது கழுத்தில் குத்திக்கொலை செய்தேன். பின்னர் பேரலில் உப்பை கொட்டி அவரது சடலத்தை அதில் போட்டுவிட்டு அவரது செல்போனை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: