தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து: மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி பரிதாப பலி

அண்ணாநகர்: மேம்பால தடுப்புச்சுவரில் மோதியதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். திருவொற்றியூரை சேர்ந்தவர் பாலாஜி (53). சென்னை விமான நிலைய சுங்கத் துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உஷா (48). இவர்கள் நேற்று மதியம் பெரம்பூர் மேம்பாலம் வழியாக ஐசிஎப் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மேம்பால தடுப்புச்சுவரில் வேகமாக மோதியதால்  கணவன், மனைவி இருவரும் மேம்பாலத்தில் இருந்து சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டனர். இதில், படுகாயமடைந்த உஷா சம்பவ இடத்திேலயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பாலாஜி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து போலீசார், பாலாஜியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, உஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். மேம்பாலத்தில் இருந்து தம்பதி கீழே விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: