பாலியலில் ஈடுபட சிறுமியை அழைத்த உதவி செயற்பொறியாளர் போக்சோவில் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பணத்தை காண்பித்து ஆசைவார்த்தை கூறி பாலியலுக்கு சிறுமியை அழைத்த மின்வாரிய உதவி செயற்பொறியாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கணேசபுரத்தில் வசித்து வருபவர் சுரேஷ் (54). இவர் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் அலமாதி வரையிலான உயர்மின் அழுத்த மின்சார கம்பி அமைக்கும் பணியில் சிறப்பு பிரிவு உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வேலையின் காரணமாக, வெள்ளவேடு அடுத்த மேல்மணம்பேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே மதியம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் குடிபோதையில் 500 ரூபாயை காண்பித்து பாலியலில் ஈடுபட அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சத்தியவாணி, சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உதவி செயற்பொறியாளர் சுரேசை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: