அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்.!!!

சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக இளைஞரணியினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தால் 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடி நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அண்ணா பல்கலைக்கு நிதி தேவையில்லை என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவரணி சார்பில் இன்று அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன் போராட்டம் நடைபெறும் என்று நேற்று அறிவித்தனர்.

அதன்படி, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய கோரி சென்னை கிண்டியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட திமுக இளைஞரணியினர், மாணவரணியினர் பங்கேற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்காதே, எங்கள் கல்வி உரிமையை பறிக்காதே என்று முழக்கமிட்டும், இது கல்விப்பூஞ்சோலை; இங்கு காவிக்கென்ன வேலை என்ற பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைபோல், சென்னை தாம்பரம், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களிலும் திமுக இளைஞரணியினர் துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: