மாணவியை மிரட்டி பலாத்காரம்: உ.பி.யில் 8 பேர் கைது

ஜான்சி: உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஹத்ராசில் 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக ஜான்சியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஜான்சியை சேர்ந்த மைனர் பெண் ஒருவர் கல்லூரி விடுதியில், தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிப்ரி பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து ஜான்சி மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவர் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மற்றவர்கள் விடுதிக்கு வெளியே நின்று கொண்டு இருந்துள்ளனர். சம்பவம் நடந்தபோது கல்லூரி வளாகத்தில் தேர்வு நடந்து கொண்டிருந்துள்ளது. அதனால், ஆசிரியர்கள் தேர்வு நடத்துவதில் மும்முரமாக இருந்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து சற்று தொலைவில் தான் கல்லூரி அமைந்துள்ளது. ஆனாலும், யாரும் இதனை கவனிக்கவில்லை. கைது செய்யப்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விடுதி மூடப்பட்டு இருந்த போதிலும், எப்படி உள்ளே நுழைந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 8 பேரும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் மைனர் பெண்ணிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளனர்,” என்றார். இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: