டாஸ்மாக் மதுபான கடையில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற ஆசாமி கைது

திருவள்ளூர்: டாஸ்மாக் மதுபான கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வேப்பம்பட்டு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கண்ணன் என்பவர் விற்பனையாளராகவும், செல்வகுமார் என்பவர் மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த கடையில் நேற்று முன்தினம் பெருமாள்பாட்டை சேர்ந்த குமார்(50) என்பவர் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து மது வாங்க முயற்சித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த விற்பனையாளர் கண்ணன் அந்த ரூ.2 ஆயிரம் நோட்டை மேற்பார்வையாளர் செல்வகுமாரிடம் கொடுத்துள்ளார்.

அதனை சோதனை செய்தபோது அந்த பணம் கள்ளநோட்டு என தெரியவந்தது. இதனையடுத்து குமாரை பிடிக்க முயன்றபோது அந்த கள்ளநோட்டை பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து மேற்பார்வையாளர் செல்வகுமார் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று குமாரை கைது செய்து விசாரித்தபோது அவர் கள்ளநோட்டை மாற்ற முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து ரூ.4 ஆயிரம் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: