கணவரின் நிர்பந்தமே காரணம் குஷ்பு விலகியதால் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: கட்சியிலிருந்து குஷ்பு விலகியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பு கிடையாது என்றும், அவர் விலகியதற்கு கணவரின் நிர்பந்தமே காரணம் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜவில் குஷ்பு சுந்தர் சேர போகிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. 2014 மக்களவை தேர்தலுக்கு பின்பு காங்கிரசில் சேர்ந்த குஷ்புவுக்கு தேசிய செய்தி தொடர்பாளர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பு தரப்பட்டு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஆனால், சில மாதங்களாக கட்சியில் அவரது ஈடுபாடு குறைவாகவே இருந்தது. அவரை நேரில் சந்தித்து பேசினேன்.

அப்போது, இனி நான் மிகுந்த ஈடுபாட்டுடன் கட்சி பணியாற்றுவதாக உறுதி கூறினார். செப்டம்பர் 24ம் தேதி வேளாண் சட்டங்களை எதிர்த்து தினேஷ் குண்டுராவ் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். பெரம்பூரில் நடைபெற்ற தலித் பெண் பாலியல் வன்கொடுமையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜவை கடுமையாக விமர்சனம் செய்தார். கடந்த 5 நாட்களுக்கு முன் டெல்லிக்கு பயணமானபோது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலை சந்திக்க போவதாகவும் காங்கிரஸ் கட்சியில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பாஜவில் சேரப் போவதாக அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜவில் சேருவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

ஆனால் விமர்சனம் செய்த 6வது நாள் பாஜவில் சேரும் முடிவை ஏன் எடுத்தார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும். அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட பாஜவில் இணைய இருக்கிறார். இதன் மூலம் நீண்டகாலமாக அவர் ஏற்றுக்கொண்ட கொள்கையை பாஜவிடம் அடகு வைத்திருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் எத்தகைய பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை. அவர் கட்சியில் இருந்து விலகியதற்கு கணவரின் நிர்பந்தமே காரணம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: