சோழவந்தான்/அலங்கை: அலங்காநல்லூர் தனிச்சியம் சாலையில் கொண்டையம்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக சக்கரவர்த்தி, உதவி விற்பனையாளராக பிச்சை(எ) சண்முகவேல் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை 4 மணியளவில் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரதீப்ராஜா என்பவர் பணம் தராமல் மதுபானம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் பிரதீப் ராஜா மதுபாட்டிலால் தாக்கியதில் டாஸ்மாக் பணியாளர் பிச்சை (எ)சண்முகவேலுக்கு மண்டை உடைந்தது. மேலும் மது விற்பனை செய்த பணம் மற்றும் மதுபாட்டில்களை பிரதீப்ராஜா திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கடை விற்பனையாளர் சக்கரவர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.