திருவனந்தபுரம்: பல கோடிகள் புரளும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், களத்தில் நுழையாமலும், ஜெர்லி அணியாமலும் கேரள வாலிபர் கோடீஸ்வரரானது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பானூர் மீத்தேல் பரம்பில் பகுதியை சேர்ந்தவர் கே.எம்.ராஸிக். இவர் ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம் லெவன்’ விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று ரூ. 1 கோடி பரிசு வென்றுள்ளார். ஐபிஎல் தொடர்பாக ‘ட்ரீம் லெவன்’ தினசரி போட்டிகளில் ரூ.1 கோடி அதிகபட்ச பரிசுத்தொகையாகும். ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் 2 அணிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 வீரர்களின் மெய்நிகர் குழுவை தேர்ந்தெடுத்து ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டி விளையாடப்படுகிறது. இதில் நிஜ அணியின் வீரர்கள் அடித்த ரன்கள், விக்கெட்டுகள் மற்றும் பவுண்டரிகளின் அடிப்படையில், ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் போட்டியில் விளையாடுபவருக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.