புதுடெல்லி: டெல்லி மால்வியா நகரில் 80 வயது கந்தா பிரசாத் என்பவரும், அவரது மனைவி பாமினி தேவியும், ‘பாபா கா தாபா’ என்ற பெயரில் சாலையோர சிற்றுண்டி கடை நடத்தி வருகின்றனர். கொரோனா முடக்கம், பலரது வாழ்க்கையை முடக்கிப் போட்டது போலவே இந்த தம்பதியின் வாழ்க்கையிலும் பேரிடியை தந்தது. ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், வாடிக்கையாளர்கள் வராததால், வியாபாரமின்றி வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருப்பதாக கவுரவ் என்ற வாடிக்கையாளரிடம் கந்தா பிரசாத் தாத்தா கண்ணீர் வடித்தார். முதியவரின் வார்த்தைகளில் கலங்கிப் போன அந்த வாடிக்கையாளர், அவர் படும் துயரத்தை வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். இதனை நடிகர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களின் பக்கங்களில் ஷேர் செய்ய, உடனடியாக அந்த தம்பதியினர் வைரல் ஆனார்கள். இதனால், அவர்களின் கடையில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிந்து உணவு பொருட்களை வாங்கி சென்றதால், அனைத்தும் விற்று தீர்ந்தது.