அரியலூர்: திருமானூர், தா.பழூர் பகுதிகளில் களை நெல்களை தடுக்க விவசாயிகள் வயல்களில் வாத்துகளை மேய விடுகின்றனர். வயலில் களை நெல்களை தடுக்க வாத்துகளை மேயவிடுவதால், நெல் சாகுபடி செய்யும் போது நிலத்தில் இருக்கும் பழைய ரக நெல்லை வாத்துக்கள் சாப்பிடுவதால் புதிதாக அடுத்த சாகுபடியின் போது கலப்பு நெல் வராமல் தடுக்க முடியும் என கூறும் விவசாயிகள். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் பகுதியில் உள்ள 21 கிராம ஊராட்சிகள் டெல்டா பகுதி ஆகும். இந்த பகுதியில் காவிரி நீர் மற்றும் நிலத்தடி நீரைக்கொண்டு 21 கிராம ஊராட்சிகளில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது திருமழபாடி பகுதியில் விவசாயிகள் குறுவை சாகுபடியை அறுவடை செய்து, சம்பா சாகுபடிக்கு வயலை தயார் செய்து வருகின்றனர்.