ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 6 பேரிடம் தனிப்படையினர் கிடுக்கிப்பிடி விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: படப்பை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த மணிமங்கலம், காந்தி நகரை சேர்ந்தவர் சதிஷ் (32), ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று முன்தினம் சதீஷ், தனது நண்பர்கள் ராமு, ஆறுமுகம், சுரேந்தர் ஆகியோருடன், படப்பை அடுத்த காவனூர் பகுதியில் வீட்டுமனையை பார்வையிட சென்றார். பின்னர், அஙகிருந்து காரில் படைப்புக்கு புறப்பட்டார். படப்பை அருகே ஒரத்தூர் மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த ஒரு கார், சதிஷ் காரை மறித்து நின்றது. அதில், இருந்து இறங்கிய மர்மநபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். இதை கண்டதும், அவரது நண்பர்கள், காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் சதீஷ் போலி பத்திரங்கள் மூலம் நிலங்கள் விற்பனை செய்துள்ளார். சில இடங்களில் நில அபகரிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இதனால், நிலத்தை இழந்தவர்களிடம் ஏற்பட்ட தகராறில் சதீஷ் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும், 4 தனிப்படை அமைத்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இதில், காரில் வந்த சதீஷின் நண்பர்கள் ராமு, ஆறுமுகம் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். சுரேந்தர் தலைமறைவாக உள்ளார், அவரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையில், சதீஷ் கொலை தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து, தீவிர விசாரணை நடக்கிறது.

Related Stories: